Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய பட அறிவிப்பின்போது மட்டும் அரசியல் பேசும் ரஜினி: மன்சூர்அலிகான்

ஏப்ரல் 11, 2019 10:31

சின்னாளப்பட்டி: திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றி வித்தியாசமான முறையில் பிரசரம் செய்து வருகிறார். சூ பாலீஷ் போடுவது, புரோட்டா செய்வது, டீ போடுவது, தெருக்களை கூட்டுவது, டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுவது, குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது என விதவிதமான முறையில் பிரசாரம் செய்து பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார். 

மேலும் பொதுக்கூட்டத்தில் விவசாயி போல் உடையணிந்து வந்தார். தொகுதிக்குள் பொதுமக்களிடம் உரிமையாக பேசி பழகி அவர்களது கஷ்ட நஷ்டங்களை கேட்டு வருகிறார். ஆத்தூர், பஞ்சம்பட்டி, ஆரியநல்லூர், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று மன்சூர்அலிகான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சாலையோரம் இருந்த கடையில் கம்பங்கூழ் வாங்கி பருகினார். மேலும் கம்பங்கூழை பொதுமக்களுக்கு விற்பனை செய்தார். வியாபாரம் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார். 

பொதுமக்களிடையே பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய பிரச்சினையாக உள்ளது குடிநீர் பிரச்சினை. எனவே என்னை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் செந்துறை, குடகனாறு பகுதியில் அணை கட்டி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன். மற்ற கூட்டணிகள் எல்லாம் 500, 1000 கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு சேர்ந்துள்ளனர். ஆனால் நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன். உங்களில் ஒருவனாக இருப்பேன். உங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய நடவடிக்கை எடுப்பேன். 

புதிய பட அறிவிப்பு வரும் போது மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். அதன் பின்னர் அமைதியாகி விடுகிறார். மற்றொரு புதிய படம் வெளியாகும் போது அறிக்கை வெளியிடுவார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது என அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்